×

மானாமதுரையில் வாக்கிங் சென்றபோது அமமுக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: கும்பலுக்கு போலீஸ் வலை

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஊமத்துரை. இவரது மகன் சரவணன் (38). இவர் அதிமுகவில் இருந்தபோது மானாமதுரையில் 18வது வார்டு கவுன்சிலராக இருந்தார்.  டிடிவி.தினகரன் அமமுக கட்சியை துவக்கியபோது, அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்து, மானாமதுரை அமமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.மானாமதுரை - சிவகங்கை சாலையில் தனியாக நேற்று காலை 7 மணியளவில் சரவணன் வாக்கிங் சென்றார். பைபாஸ் பாலம் அருகே சென்றபோது, ஆயுதங்களுடன் வந்த கும்பல், சரவணனை வழிமறித்து அரிவாளால் வெட்டியது.  கும்பலிடமிருந்து தப்பி சரவணன் ஓடியுள்ளார். தொடர்ந்து விரட்டி சென்ற கும்பல் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். கும்பல் உடலை சாலையோரத்தில் வீசிவிட்டு  சென்றது. இந்த தகவல் ஊருக்குள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மானாமதுரை போலீசார் சம்பவ இடம் வந்து சரவணன் உடலை கைப்பற்றி சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உறவினர்கள் மற்றும் அமமுகவினர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. இது   குறித்து மானாமதுரை சிப்காட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றம் நீடிப்பதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.வெட்டி கொலை செய்யப்பட்ட சரவணன் மானாமதுரையில் வாரச்சந்தை, தினசரி சந்தையை குத்தகைக்கு எடுத்திருந்தார். மேலும் ஒப்பந்ததாரராகவும் செயல்பட்டார். தொழில் போட்டி காரணமாக கொல்லப்பட்டரா அல்லது அரசியல்  காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.4 தனிப்படை அமைப்பு: கொலை செய்யப்பட்ட அமமுக ஒன்றியச்செயலாளர் சரவணனின் உறவினர்கள் மற்றும் அமமுக மாவட்ட செயலாளர் உமாதேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் பிரேத பரிசோதனை முடிந்து உடலை வாங்க மறுத்து  ஆர்ப்பாட்டம் செய்தனர். உடனடியாக கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்பி ஜெயச்சந்திரன் உறுதி அளித்ததன் பேரில், உடலை பெற்று  சென்றனர்.



Tags : Ammukan Pramanikar Samarari Vettikkalai ,Manamadurai , Walking, Manamadurai,Saramari, Vettikkalai
× RELATED மானாமதுரை வங்கியில் கொள்ளை முயற்சி:...